Wednesday, January 27, 2016

சிறப்பு ஆசிரியர்கள் பணி நியமனம் எப்போது? விரக்தியுடன் காத்திருக்கும் 1 லட்சம் பேர்


தமிழகத்தில் சிறப்பு ஆசிரியர்கள் பணி நியமனம், அரசின் அறிவிப்போடு நின்றுபோனது. இதனால், ஒரு லட்சம் பட்டதாரி ஆசிரியர்கள் விரக்தி அடைந்துள்ளனர்
. ஆசிரியர் பட்டய பயிற்சி மற்றும் முதுகலை பட்டய பயிற்சி முடித்தவர்களுக்கு, கடந்த, 2011ம் ஆண்டுக்கு முன், தமிழகத்தில், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில், பணி நியமனம் வழங்கப்பட்டு வந்தது.பின், மத்திய அரசு உத்தரவுப்படி, 2013ம் ஆண்டில் இருந்து ஆசிரியர் தேர்வுவாரியம் மூலம், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே, ஆசிரியர் பணி நியமனம் வழங்கப்படுகிறது.
அதேபோல், 2011ம் ஆண்டு முதல் விளையாட்டு, ஓவியம், தையல் போன்ற சிறப்பு ஆசிரியர்களுக்கும், தமிழக அரசு எந்தவித முக்கியத்துவமும் அளிக்கவில்லை.இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பரில், 1,188 சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள், போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படும் என, தமிழக அரசு அறிவித்தது.
இதில், பார்வையற்றோர், காது கேளாதோர், உடல் ஊனமுற்றோர் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கான, 3 சதவீத இடஒதுக்கீட்டில், ஒவ்வொரு பிரிவுக்கும், தலா, 1 சதவீதம் ஒதுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
ஆயினும், தற்போது விளையாட்டு, ஓவியம், தையல் போன்ற சிறப்பு ஆசிரியர்களில், மாற்றுத் திறனாளிகளுக்கு எத்தனை இடங்களை ஒதுக்கீடு செய்வது என்பது குறித்து, தமிழக அரசிடம் அனுமதி கேட்டிருப்பதாக கூறி, போட்டித் தேர்வுகளை நடத்தாமல், தேர்வு வாரியம் காலம் தாழ்த்தி வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
காலம் தாழ்த்துகிறது:சிறப்பு ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுவதாவது:கடந்த, 2012ம் ஆண்டுக்கு பிறகு, நான்கு ஆண்டுகளாக, தமிழகத்தில் சிறப்பு ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யவில்லை.
தற்போது, சிறப்பு ஆசிரியர்கள் பணிக்காக, ஒரு லட்சம் பேர் தயாராக இருக்கின்றனர்.
ஆனால், சிறப்பு ஆசிரியர்கள் பணி நியமனத்துக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை வெளியிடாமலேயே, ஆசிரியர் தேர்வு வாரியம் காலம் தாழ்த்தி வருகிறது. இதனால், நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment